உலக வங்கியின் நிதியில் சுகாதாரத்துறையை மேம்படுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

by Bella Dalima 16-05-2020 | 8:41 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சமூக வலைத்தளம் மூலம் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்போது, நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக 128 மில்லியன் டொலர் நிதியை (2400 கோடி ரூபா) குறைந்த வட்டி வீத கடன் அடிப்படையில் உலக வங்கி வழங்கியுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். போதுமானளவு அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டில்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தனிநபர் பாதுகாப்பை வழங்குமாறும் கைத்தொழில் கட்டமைப்பு உற்பத்திகளுக்கு நிதியைப் பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். சீனாவைக் கைவிட்டுச் செல்லும் அமெரிக்க தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இந்தோனேஷியாவின் பக்கம் ஈர்க்கும் வேலைத்திட்டத்தை இந்தோனேஷிய முதலீட்டு அமைச்சர் தற்போது பலமாக நடைமுறைப்படுத்துகிறார். இயலுமாயின் இலங்கையாலும் அதனை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய முதலீட்டாளர்களை அழைத்து வந்து விசேட கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். புதிய கைத்தொழில் முதலீட்டுத் திட்டமிடலூடாக முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கான தௌிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்திக் கூறினார்.