அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவு: அச்சத்தில் மக்கள்

by Bella Dalima 16-05-2020 | 8:22 PM
Colombo (News 1st) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் நேற்றிரவு திடீரென குறைவடைந்ததாக மக்கள் கூறினர். அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் திருக்கோவில் வரையான கரையோரப் பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீர் மட்டம் திடீரெனக் குறைவடைந்துள்ளது. இதனால் கல்முனை, காரைத்தீவு, பெரிய நீலாவணை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, நிந்தவூர் , மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் போன்ற கரையோர கிராம மக்கள் அச்சம் காரணமாக நேற்றிரவு வீடுகளை விட்டு வௌியேறி வீதிகளில் நின்றுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, களுதாவளை மற்றும் ஒந்தாச்சிமடம் ஆகிய கரையோரப் பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது. சுமார் ஒன்று தொடக்கம் இரண்டு அடி வரையில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சுனாமி ஏற்படக்கூடும் எனும் அச்சம் பரவியுள்ளது. இது மக்களின் அறியாமை எனவும் 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனர்த்தம் தொடர்பான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் A.C.M.ரியாஸ் குறிப்பிட்டார். குறித்த பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், அது தொடர்பில் பீதியடையத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.