மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வெவ்வேறு மின்பட்டியல்

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வெவ்வேறு மின்பட்டியல்களை வழங்குமாறு ஆலோசனை

by Staff Writer 14-05-2020 | 2:38 PM
Colombo (News 1st) அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையினால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக ஒரே மின்சார கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தத் தவறை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் இரு மாதங்களுக்குமான மின் கட்டணங்களை செலுத்த மின் பாவனையாளர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குவதுடன், குறித்த காலப்பகுதியில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.