எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

by Staff Writer 14-05-2020 | 5:16 PM
Colombo (News 1st) எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. அதன்பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகைள மீளவும் இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகள் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீண்டும் அந்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.