கண்காணிப்பு முகாம்களிலிருந்து 425 பேர் வௌியேறினர்

மேலும் 425 பேர் கண்காணிப்பு முகாம்களிலிருந்து வௌியேறினர்

by Staff Writer 13-05-2020 | 2:38 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 425 பேர் இன்று (13) வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் வவுனியா - பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 129 பேரும் அடங்குகின்றனர். குறித்த தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 192 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான PCR பரிசதோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், Covid - 19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 129 பேர் இன்று சொந்த இடங்களுக்கு திரும்பினர். இவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன. நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர். வவுனியா - பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 161 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 31பேர் குறித்த முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுமார் 3800 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை 7,664 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்துள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.