மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

by Staff Writer 12-05-2020 | 2:32 PM
Colombo (News 1st) நிதி தூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒழித்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பான மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை நீக்கியுள்ளது. “சாம்பல் நிறப்பட்டியல்” என அடையாளப்படுத்தப்படும் நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் ஆவணத்தில் நிதிதூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகிய உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நாடாக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அட்டவணைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உபாய ரீதியான குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென கால வரையறையுடன் கூடிய நடவடிக்கைத் திட்டமொன்று வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள், நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிறன் மிக்கதும் உறுதியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து குறித்த பட்டியிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டது. 2019 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பாரிஸில் நடைபெற்ற அமர்விலேயே இலங்கை நீக்கப்பட்டது.