முற்பதிவு செய்தோருக்கே ரயில்களில் பயணிக்க முடியும்

முற்பதிவு செய்தவர்களுக்கே ரயில்களில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம்

by Staff Writer 10-05-2020 | 2:44 PM
Colombo (News 1st) நாளை (11) முதல் சேவையில் ஈடுபடும் ரயில்களில் பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்பிரகாரம், கடந்த வியாழக்கிழமைக்கு முன்னர் முற்பதிவு செய்வதர்களுக்கே நாளை முதல் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்களில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களால் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்களுக்கு நாளை பயணிக்க அனுமதி வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார். இதேவேளை, 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பதிவுசெய்பவர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் வாரத்தில் ரயிலில் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு, நாளை முதல் 10 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இரண்டு பயணிகளுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.