பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல்

by Staff Writer 06-05-2020 | 3:41 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் மீள கூட்டப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திகதி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதன் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டும் நாள், உரிய காலத்தை தாண்டி செல்வதால் பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பரவும் சூழலில் பொதுத்தேர்தலை நடத்துவதனூடாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்பதால், பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.