இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு

மக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

by Staff Writer 06-05-2020 | 3:02 PM
Colombo (News 1st) கொழும்பு , களுத்தறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை மே மாதம் 11 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆராய்ந்துள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடனான கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது. சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, தனியார் மற்றும் அரச துறைகளின் அனைத்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அலோசனை வழங்கியுள்ளார். நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது பணியாளர்களுக்கான பொதுப்போக்குவரத்தினை மேற்கொள்ளும் நிறுவனங்கள் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைமைகளை பின்பற்ற வேண்டியது தொடர்பாகவும் ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நிறுவன கட்டமைப்பிற்கு ஏற்ப மாற்றங்களைத் தீர்மானிக்க முடியும் எனவும் சேவைக்கான அறிக்கையிடல் நேரத்தை வழக்கமான அடிப்படையில் அல்லாமல் நிறுவனத் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய அடையாள அட்டை , போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்துத் திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், கிராமிய மற்றும் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 11 ஆம் திகதியிலிருந்து மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் பகுதிகளில் துறைமுகம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விடயதானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் என்பன எதிர்காலத்தில் பரவாமல் இருப்பதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.