ஏப்ரல் 21 தாக்குதல் : மேலும் சில ஆவணங்கள் சிக்கின

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் : மேலும் சில ஆவணங்கள் சிக்கின

by Staff Writer 04-05-2020 | 1:54 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான பயிற்சி நிலையத்திலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தளம் முந்தல், மதுரங்குளியில் நடத்திச் செல்லப்பட்ட குறித்த பயிற்சி நிலையம் தற்போது  பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளுடன் பயிற்சி நிலையமொன்றை நடாத்திச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். தாக்குதல்தாரிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் நோக்கில்  குறித்த நபர் பயிற்சி நிலையத்தை நடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சந்தேகநபர் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பித்து தடுப்புக்காவல் உத்தரவைப்பெற உத்தேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.