ஆர்ப்பாட்டக் கொட்டகையைக் காணவில்லை: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு

by Staff Writer 04-05-2020 | 6:23 PM
Colombo (News 1st) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருகோணமலையில் அமைக்கப்பட்ட கொட்டகை காணாமற்போயுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தற்காலிகமாக போராட்டத்தினைக் கைவிட்டு வீடு திரும்பியிருந்தனர். இந்த நிலையில், போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கொட்டகை அடையாளந்தெரியாதோரால் அகற்றப்பட்டுள்ளது. கொட்டகை அகற்றப்பட்ட இடத்திற்கு அருகில் பொலிஸ் காவலரண் உள்ளது. இது தொடர்பில் திருகோணாமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்தனர்.