பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்

by Staff Writer 03-05-2020 | 8:02 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் அரசியலை ஒதுக்க வேண்டும் என்ற கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு அமையவே பிரதமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரை அழைத்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எனினும், இந்த கூட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டத்தில் அர்த்தபூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடியாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். தேசிய ஒற்றுமை தேவையாக உள்ள தருணத்தில் கட்சி அரசியல் தொடர்பில் கவனம் செலுத்தும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.