பொதுத்தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு தாக்கல்

பொதுத்தேர்தலை இடைநிறுத்தக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

by Staff Writer 02-05-2020 | 7:22 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷரித்த குணரத்ன உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கொரோனா தொற்று நாடு முழுவதிலும் பரவிவரும் சூழ்நிலையில், பாராளுமன்ற தேர்தலை நடத்துவது நாட்டு மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு விடயம் என சட்டத்தரணி இஷாட் சஹாப்தீன் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியை இரத்து செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மனுதாரருமான சட்டத்தரணி ஷரித்த குணரத்ன உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அணைக்குழுவின் ஏனைய இரண்டு உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் P. B.ஜயசுந்தர, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி வேட்புமனுக்களை கையேற்று , ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை இரத்து செய்து ஜூன் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்தமை, தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், சட்டத்திற்கு முரணான விடயம் எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.