நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 01-05-2020 | 4:05 PM
Colombo (News 1st) மத்திய, தென், ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் கடும் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமடு கிராமத்தில் நேற்று வீசிய சூறாவளியினால் வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. வீடொன்றும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மின்னேரியா - சமஹிபுர பகுதியில் வீசிய பலத்த காற்றினால் இரண்டு வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மின் கம்பிகள் மீது மரம் முறிந்து வீழந்தமையால் குறித்த பகுதியில் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதனிடையே, பொலன்னறுவை - கலஹகல பகுதியில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். கலஹகல அங்கம்மெடில்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.