பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியாது - ஜனாதிபதி

பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியாது - ஜனாதிபதி

by Staff Writer 30-04-2020 | 9:52 PM
Colombo (News 1st) கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்ட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26 ஆம் திகதி அனுப்பப்பட்ட ஒருங்கிணைந்த கடிதத்துக்கு பதிலளித்து ஜனாதிபதி தனது செயலாளர் ஊடாக இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அனுப்பிய ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளவர்கள் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என சிந்திப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தரப்பினர் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் Covid - 19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் தரப்பினர் மற்றும் ஏனைய தரப்பினரின் செயற்பாடுகளை மதிக்காத நிலைமை தோன்றுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 2 ஆம் திகதி வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானிக்கு ஏற்ப 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு 2020 ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளதாகவும் அதனை அறிவிக்குமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேதாசவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ச தனது செயலாளர் ஊடாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிததத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் முலம் தௌிவுபடுத்தியுள்ளது. மங்கள சமரவீரவின் கடிதத்தின் தவறான பல தகவல்கள் காணப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர கையெப்பமிட்டுளள இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறைநிறைப்பு பிரேரணை நிறைவேற்றப்படாத பட்சத்தில் அரசியல் அமைப்பின் 150/3 ஆம் பிரிவின் கீழ் இடைக்கால கணிக்கறிக்கை ஒன்றின் மூலம் புதிய பாராளுமன்றம் கூடி 3 மாதங்களுக்கான செலவுகள் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக பீ.பி. ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார். புதிய லிபரல் வாத சமூக பொருளாதார கொள்கை கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தேர்தலை நடத்தி மக்களின் ஜனாநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஏன் முன்னுரிமை வழங்குவதில்லை என ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளதாக இந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமருக்கும் முன்னாள் சபாநாயகர் மற்றும் 6 கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.