மழையுடனான வானிலை நீடிக்கும்

மழையுடனான வானிலை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

by Staff Writer 24-04-2020 | 8:02 PM
Colombo (News 1st) எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டியில் நேற்று (23) இரவு பெய்த கடும் மழை காரணமாக ஹந்தானை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. மரம் முறிந்து வீழ்ந்ததால், ஹந்தானை - கலஹா பகுதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மரம் முறிந்து வீழ்ந்ததில்10 வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், சுமார் 50 குடும்பங்களுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை, குருநாகலில் நேற்றிரவு கடும் மழை பெய்துள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையினால் குருநாகல் நகரிலுள்ள சுமார் 3000 வீடுகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்திருந்ததுடன், தற்போது மரங்கள் அகற்றப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கடும் காற்று காரணமாக குருநாகல் - வீரம்புகெதர பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.