பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான தேவை இல்லை - ஜனாதிபதி

by Staff Writer 21-04-2020 | 4:08 PM
Colombo (News 1st) எவ்வித காரணங்களுக்காகவும் பழைய பாராளுமன்றத்தை மீள கூட்டுவதற்கான தேவை இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்றிரவு விசேட செவ்வியில் இணைந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இறுதி நாளாக ஜூன் 2 ஆம் திகதியுள்ளது. அதன் காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்ட திகதியை மாற்றி தேர்தல் நடத்துவதற்கான தினத்தை தேசிய தேர்தல் ஆ​ணைக்குழு தீர்மானித்துள்ளது. நிலவுகின்ற சூழ்நிலையின் கீழ் உரிய முறையில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அவர்களுக்குத் தேவையெனின் தேர்தல் தொடர்பில் சில தினங்களை தீர்மானிக்க முடியும். தேர்தலை நடத்துவது தொடர்பிலும் ஒத்திவைப்பது தொடர்பிலும் சுயாதீன ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு நான் எந்த வகையிலும் தயார் இல்லை. புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான தினம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி தேர்தலை ஒத்திவைத்து புதிய பாராளுமன்றத்தைக் கூட்டாமல் எனக்கு பாராளுமன்றத்தை கூட்டக்கூடிய நிலைமை இல்லை. செயற்படுத்தக்கூடிய நிலைப்பாட்டைக் கொண்டிராத சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் நான் உடன்படுவதில்லை. எந்தக் காரணத்திற்காகவும் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான தேவை எனக்கு இல்லை. புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வோம்.
என ஜனாதிபதி குறிப்பிட்டார்.