தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் அமையாது

தேர்தல் நடந்தால் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் அமையாது - வீ.ஆனந்தசங்கரி

by Staff Writer 21-04-2020 | 5:38 PM
Colombo (News 1st) மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். சர்வதேசமே தனது நிகழ்ச்சி நிரலில் இயங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இலங்கையில் தேர்தலை நடத்துவது மனிதாபிமானமுள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களுக்கான தேவைகள் அதிகமாக காணப்படுவதாக வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவற்றைத் தீர்த்து வைக்காமல் தேர்தலுக்கு செல்வதென்பது அவர்கள் மீது தேர்தலை திணிப்பதற்கு ஒப்பானது எனவும் அவர் கூறியுள்ளார். அன்றாடம் நாட்கூலி வேலைக்கு சென்று தங்களது குடும்பங்களை பாதுகாத்து வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகள் தொடர்பில் சிந்திக்காமல் தேர்தலுக்கு செல்வதென்பது மனிதாபிமானமற்ற, ஜனநாயகத்தை மீறுகின்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் சில விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும், ஜனநாயகத்திற்கு எதிரானதாக விரும்பத்தகாத முடிவுகளே வெளிவந்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் அது சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் அமையாது என்பதோடு எதிர்காலத்தில் இது ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.