ஊரடங்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

by Staff Writer 20-04-2020 | 11:17 AM
Colombo (News 1st) கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முற்பகல் புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதற்கமைய கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வார இறுதி நாட்களான ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமையும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வௌியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏ ற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.