தேர்தலுக்கு இணக்கமில்லை: பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கடிதம் 

by Staff Writer 20-04-2020 | 9:49 AM
Colombo (News 1st) பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் கடந்த 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். எனினும், அவர் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை இன்றைய தினத்திலேயே ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று நடைபெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கின்றீர்களா என வினவியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 28 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்ததாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் குறிப்பிட்டுள்ளார். அந்த யோசனையை நிராகரிக்கும் வகையில் இந்த கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் 28 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தாம் இணங்காதிருப்பதற்கான நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் 7 விடயங்களை அதில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பிலான நிலைப்பாட்டினையும் அவர் தனது கடிதத்தில் தௌிவுபடுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள், குறிப்பாக கருத்தாடலுக்கு வித்திடுகின்ற அல்லது சமூக உணர்வை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை கலந்துரையாடுவதற்கு முன்னதாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழு பின்பற்ற வேண்டிய நடைமுறை அல்லவெனவும் ரட்ணஜீவன் ஹூல் சுட்டிக்காட்டியுள்ளார். தமது நிலைப்பாட்டினை தற்போதைக்கு பகிரங்கப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் வௌியானதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார். தேர்தலை பிற்போடுவது தொடர்பிலும் உடனடியாக நடத்துவது தொடர்பிலும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், எந்த கருத்துக்களும் தேர்தலை ஒத்திவைக்கவோ நடத்தவோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் தற்போதைய சூழலில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், கவனத்திற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பிலும் பக்கசார்பற்ற களத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே ஆணைக்குழு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் மாத்திரமே பக்கசார்பாக செயற்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய செய்திகள்