மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

by Staff Writer 20-04-2020 | 8:24 PM
Colombo (News 1st) அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இன்று ஜனாதிபதி செயலகத்திற்று வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில், மாவட்ட செயலாளர்களின் தலைமையில் மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இன்று அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய உற்பத்திகள், கொள்வனவு, களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகத்திற்கான புதிய பொறிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு மாவட்ட செயலாளர்களால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடற்றொழில் கூட்டுத்தாபனம், விவசாய அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கான மரக்கறிகள் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களின் அத்தியாவசியங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அனேகமானோர் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் உற்பத்திகளை நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதால், அது மிக இலாபமான செயற்பாடாக அமைந்துள்ளதாக மாவட்ட செயலாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.