by Staff Writer 20-04-2020 | 7:55 PM
Colombo (News 1st) கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியானது.
PCR பரிசோதனையை அடுத்து நேற்று பிற்பகல் இவர்களில் 21 பேர் முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஏனையவர்கள் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க மாவத்தை தொடர்ந்தும் அதி அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த பகுதிக்குள் எவரும் உள்நுழையவோ அங்கிருந்து வௌியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை முதலில் தெரியவந்தது.
குறித்த பெண் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.
அதன் பின்னர், அப்பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது.
இவர் வசித்த வீட்டை அண்மித்த 3 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வெலிசர தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.