விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட சசிகுமார்

கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட சசிகுமார்

by Bella Dalima 19-04-2020 | 4:43 PM
திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிகுமார், மதுரை மாநகர பொலிசாருடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மதுரை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மதுரை மாநகர பொலிசாரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒலிபெருக்கிகள், LED திரை பொருத்திய வாகனங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நடிகரும், தன்னார்வலருமான சசிகுமார், தெப்பக்குளம் பகுதியில் பொலிசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தெப்பக்குளம் அருகில் சாலையில் நின்று இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்களிடம் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருங்கள், அநாவசியமாக வெளியே சுற்றாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகளை நடிகர் சசிகுமார் தயார் செய்து மதுரை மாநகர பொலிசாருக்கு வழங்கியுள்ளார். 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சி மதுரை மாநகர பொலிஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.