2ஆவது தாக்குதல் திட்டம் குறித்து தெரியவந்துள்ளது

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இரண்டாவது தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது

by Staff Writer 19-04-2020 | 8:45 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இரண்டாவது தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார். பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்ததாவது,
போதுமான தகவல்களுடன் பல விசாரணைகள் நடத்தப்பட்டு பல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, பல தொலைபேசி உரையாடல்கள் பரிசீலிக்கப்பட்டு, அதனூடாக சில இடங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டே சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுதாரருடன் சில அமைப்புகளை நிறுவி, அந்த அமைப்புகளூடாக இளைஞர் குழுக்கள் மூலம் கடும்போக்குவாதத்தைப் பரப்புவதற்கு செயற்பட்டுள்ளனர். வௌிநாடொன்றிலுள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர். தெற்காசிய வலயத்தில் வௌிநாடொன்றில் இடம்பெற்ற தாக்குதலொன்றின் பின்னர் அந்த சந்தேகநபர்கள் இலங்கையை பாதுகாப்பான இடமாகப் பயன்படுத்துவதற்கும், அந்த சந்தேகநபர்களை இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்த நாட்டிற்குள் முதலாவது குண்டுத் தாக்குதலின் பின்னர் ஏதேனுமொரு தினத்தில் மற்றுமொரு குண்டுத் தாக்குல் தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இந்த விசாரணைகளால் அந்தத் திட்டத்தை முறியடிக்க முடிந்துள்ளது. அந்தத் திட்டத்திற்கு உதவிய, ஒத்துழைத்த, உத்தரவிட்டவர்கள் தொடர்பான தகவல்களும் வௌியாகியுள்ளன. அது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.