அரச வைத்திய அதிகாரிகளின் அறிக்கைக்கு சாலி கண்டனம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கைக்கு அசாத் சாலி கண்டனம்

by Staff Writer 19-04-2020 | 7:23 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் சூழ்நிலையிலிருந்து இலங்கை வெளியேறுவதற்கான திட்ட வரைபெனும் பெயரில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குறித்த அறிக்கை முஸ்லிம் விரோத அறிக்கையாக உருவாக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதென அசாத் சாலி தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை முஸ்லிம் விரோத அறிக்கையாக உருவாக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் கூட்டுத்தயாரிப்பாளர்களாகக் கூறப்பட்டுள்ள ICTA நிறுவனம், தமக்கும் அந்த அறிக்கைக்கும் தொடர்பில்லை என மறுதலித்துள்ள நிலையில் குறித்த செயற்பாடு அப்பட்டமான இனவாதம் என அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இனவாத அமைப்பிலிருந்து மருத்துவர்கள் விலக வேண்டும் எனவும் அசாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.