இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு; உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ அண்மித்தது

by Bella Dalima 18-04-2020 | 4:05 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 500-ஐ அண்மித்துள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14,000-ஐ கடந்துள்ளது. இந்தியா முழுவதிலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்ட்ரா மற்றும் மத்தியபிரதேஷ் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மஹாராஷ்ட்ராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆல் அதிகரித்து 201 ஆக பதிவாகியுள்ளது. மத்தியபிரதேஷில் நேற்றைய தினத்தில் 13 உயிரிழப்புகள் பதிவாகியதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆகவும் குஜராத்தில் 41 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலேயே அதிகளவிலான தொற்றாளர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு 3,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1323 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.