by Staff Writer 17-04-2020 | 5:27 PM
Colombo (News 1st) முடக்கப்பட்டுள்ள அமெரிக்க மாநிலங்களை எதிர்வரும் மாதங்களில் மீளத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளார்.
அமெரிக்கா முழுவதிலும் Covid-19 தொற்று பரவலடைந்து வருகின்ற நிலையில், மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவை மீளத்திறத்தல் எனும் தொனிப்பொருளுடன், 3 கட்டங்களின் கீழ் இதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அமெரிக்க ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளன.
சமஷ்டி அரசாங்கங்களின் ஆதரவுடன், மாநில ஆளுநர்கள் தாமாகவே இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் சில மாநிலங்களை இம் மாதத்திலேயே மீளத்திறக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதிலும் 654,301 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 32,186 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்காவிலே அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.