முடக்கப்பட்டிருந்த தாராபுரம் பகுதி விடுவிப்பு

முடக்கப்பட்டிருந்த மன்னார் - தாராபுரம் பகுதி விடுவிப்பு

by Staff Writer 15-04-2020 | 2:56 PM
Colombo (News 1st) மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாராபுரம் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, தாராபுரம் பகுதி கடந்த 7 ஆம் திகதி முதல் முடக்கப்படிருந்தது. இதேவேளை, கண்டி - அக்குறணை, பேருவளை சீனன்கோட்டை மற்றும் பன்னில உள்ளிட்ட கிராமங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்புப் படையணியின் தலைவர், இராணுவத்தளபதி லெப்டினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜாஎல - சுதுவெல்ல பகுதி பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாட்டில் தொற்றுக்குள்ளான 15 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களே புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் இருந்தவர் என கூறப்படுகின்றது. தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் பலாலியிலும் நால்வர் முழங்காவிலிலும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் கண்காணிப்பட்டு வந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்கள் 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 142 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.