கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் குணடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு

by Staff Writer 15-04-2020 | 4:03 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜா எல - சுதுவெல்ல பிரதேசம் தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பில் உள்ளது. அந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பினை பேணிய ஒருவர், தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தபோது தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு - கிராண்ஸ்பாஸ் - நாகலகம் வீதியில் குறித்த நபர் நெருங்கி செயற்பட்ட 20 பேர் கடற்படையினரால் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன், பிரதேசத்தின் 31 வீடுகளில் வசித்த 113 பேர் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பப்படவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மருதானை, சுதுவெல்ல பிரேதசங்களில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி செயற்பட்ட வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு - குணசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த சிலரும் இன்று தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு முன்னர் வரக்காப்பொல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட விமான நிலைய சுத்திகரிப்பு பிரிவில் பணியாற்றிய பெண்ணுடன் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெண் உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் முதல் சீதுவ பிரதேசத்திலுள்ள அவர்களின் தங்குமிடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று அப்பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்