இலங்கையர்கள் மூவர் நாடு திரும்பினர்

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மூவர் நாடு திரும்பினர்

by Staff Writer 10-04-2020 | 3:36 PM
Colombo (News 1st) சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர். துபாய் மற்றும் மாலைத்தீவிலிருந்து குறித்த மூவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இருவர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (08) இலங்கையை வந்தடைந்ததாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மாலைத்தீவு விமான நிலையத்தில் சிக்கியிருந்த ஒருவரும் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளார். ஏனைய 30 பேரையும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியூலர் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்படும் இலங்கையர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.