வௌிநாட்டு பணத்தை வைப்பிலிட்டால் ஊக்குவிப்பு வட்டி

NRFC கணக்கில் வௌிநாட்டு பணத்தை வைப்பிலிடும்போது 2% ஊக்குவிப்பு வட்டி

by Staff Writer 09-04-2020 | 3:11 PM
Colombo (News 1st) NRFC கணக்கு வைத்திருப்போர் வௌிநாட்டு பணத்தை வைப்பிலிடும் போது நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டிக்கு மேலதிகமாக 2 வீத ஊக்குவிப்பு வட்டியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டின் அந்நியச்செலாவணியை நிலையாக பேணும் பொருட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வௌிநாட்டில் வைப்பிலிடப்பட்டுள்ள இலங்கையர்களின் நிதியை இலங்கையில் விசேட கணக்கில் வைப்பிலிடச் செய்யும் நோக்கில் அந்நியச்செலாவணி சட்டத்தில் தளர்வுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கணக்கில் குறைந்தபட்சம் 6 மாத நிலையான வைப்பில் நிதியை வைப்பிலிட வேண்டும் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதேவேளை, 13 சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.