மீன்பிடிக்கு அனுமதி: மீனவர்களுக்கு நன்மை கிட்டியதா?

by Staff Writer 09-04-2020 | 6:32 PM
Colombo (News 1st) தொடர் ஊரடங்கு சட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கடற்றொழிலில் ஈடுபடும் அனுமதியை வழங்கியது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை மீண்டும் முன்னெடுத்து வருவதை காண முடிகிறது. எனினும், பிடிக்கின்ற மீனை சந்தைப்படுத்தும் இயலுமை அவர்களிடம் உள்ளதா? அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த நன்மைகள் மீனவர்களுக்கு கிட்டியதா? யாழ்ப்பாணம் கடற்பகுதியில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை கொழும்பிற்கு அனுப்பி வைக்க முடியாத நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கணவாய், இறால், திருக்கை போன்றவற்றை வீதியில் வைத்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது. ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றாலும் குறைந்தளவிலான வாகனங்களே மீன் கொள்வனவிற்காக வருவதாக மீனவர்கள் கவலை வௌியிட்டனர். இதனால் வியாபாரிகள் கோரும் விலைக்கு மீனை விற்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் அவற்றை குறைந்த விலைக்கு தம்மிடமிருந்து பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்வதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர். கிண்ணியாவில் நூற்றுக்கணக்கானவர்கள் மொத்தமாக மீன் கொள்வனவு செய்யும் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன் வியாபாரிகள் தொழிலை இழந்துள்ளதுடன், வௌி இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற மீனின் விலையும் அதிகரித்துள்ளது.