அரச நிவாரணத் திட்டத்திற்குள் காணாமற்போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு கோரிக்கை

by Staff Writer 08-04-2020 | 6:29 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எழுத்து மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. காணாமற்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வயோதிபராகவோ பெண் தலைமைத்துவக் குடும்பமாகவோ காணப்படுவதாக, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதையை சூழ்நிலையால் அவ்வாறான குடும்பங்கள் வருமானத்தைப் பெற முடியாதுள்ளதாக, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு குறைந்தளவு உதவிகள் அல்லது எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உணவு மற்றும் நிதியுதவிகளை காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.