19 மாவட்டங்களில் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு

19 மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு

by Staff Writer 06-04-2020 | 11:20 AM
கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாக கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் விவசாய நடவடிக்கையிலும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் துறையிலும் ஈடுபடுவதற்கான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டெ கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ள கிராமங்கள் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரும் இந்தக் கிராமங்களுக்குள் பிரவேசிக்கவோ அங்கிருந்து வௌியேறவோ மறு அறிவித்தல் வரை முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்று நிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று காலை 06 மணி வரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 312 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 14,795 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 3665 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரையான வார நாட்கள் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு துறைகளிலும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாரப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய செய்திகள்