அதி அபாய வலயங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு

அதி அபாய வலயங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு: ஏனைய 19 மாவட்டங்களில் 9 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் 

by Staff Writer 06-04-2020 | 4:32 PM
Colombo (News 1st) கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6  மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாக கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், விவசாய நடவடிக்கையிலும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் ஏற்றுமதிப் பயிர் துறையிலும் ஈடுபடுவதற்கான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.