1000 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த சுமார் 1000 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

by Staff Writer 05-04-2020 | 3:02 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த சுமார் 1000 பேர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பின் கீழ் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து வௌியேறியதன் பின்னர், வீடு திரும்பியவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து வௌியேறிய ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தங்களின் வீடுகளுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கமைய, தனிமைப்படுத்தும் நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுவோர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது கட்டாயமானதாகும் என உபுல் ரோஹன தெரிவித்தார். வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவோரின் குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலை ஏற்படும்பட்சத்தில், உடனடியாக தங்களின் பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கு அறிவிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.