நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390-ஐ அழையுங்கள்

நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390-ஐ அழைக்குமாறு அறிவிப்பு

by Staff Writer 05-04-2020 | 5:21 PM
Colombo (News 1st) இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். சந்தேகத்திற்கிடமான தொற்றாளர்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நோய்த்தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1390 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதனூடாக நோய் குணங்குறிகள் தொடர்பான விசாரணையின் பின்னர் தேவை ஏற்படுமாயின் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.