தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று: தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 05-04-2020 | 4:04 PM
Colombo (News 1st) தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 74 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக மதுரையில் 54 வயதான ஆண் ஒருவரும், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 51 வயதான ஆசிரியர் ஒருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, கொரோனா அறிகுறியுடன் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 61 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.