கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

by Staff Writer 05-04-2020 | 7:51 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (04) பிற்பகல் 4.30-இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில் மேலும் 12 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவான 8 நோயாளர்களில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். அவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டவர் என்பதுடன், மற்றையவர் மாத்தறை பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டார். கொழும்பிலிருந்து இருவரும் நீர்கொழும்பு பகுதியிலிருந்து ஒருவரும் பதிவாகியுள்ளனர். இதுவரை 29 நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 137 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மஹியங்கனை பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாகியிருந்த 17 பேர் இன்று மட்டக்களப்பு - புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். கொரோனா அபாயத்தால் முடக்கப்பட்ட அக்குரணை பகுதியை சேர்ந்த வியாபாரிகளை சந்தித்த வர்த்தகர்கள் சிலரே இன்று முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து வீடு திரும்பிய அக்குரஸ்ஸ - மாலிதுவ -கொஹூகொட பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று மீண்டும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையே இதற்கு காரணமாகும். அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் கோட்டவில வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர் வசித்த பகுதியிலுள்ள 8 வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளதுடன், கொஹூகொட வீதி தற்போது முடக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில், அக்குரணை - தெலம்புகஹவத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 147 பேர் புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.