ஏப்ரல் 6-10 வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

ஏப்ரல் 6 முதல் 10 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிப்பு

by Staff Writer 05-04-2020 | 1:01 PM
நாளை ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரையான வார நாட்கள் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை கலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளைத் தவறாக கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் விவசாய நடவடிக்கையிலும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் ஏற்றுமதிப் பயிர் துறையிலும் ஈடுபடுவதற்கான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.