ஊரடங்கு காலப்பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி

by Staff Writer 04-04-2020 | 7:32 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சீவல் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த அனுமதி தொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1500 தொடக்கம் 2000 குடும்பங்கள் பனையேறி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்றனர். சில நாட்கள் பனையேறி சீவலில் ஈடுபடாவிட்டால் பனை பழுதடைந்து அழியும் நிலை ஏற்படும். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவர்களுக்கு அனுமதியை வழங்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பின் பேரில் யாழ். மாவட்ட அரச அதிபர் , கலால் திணைக்கள பணிப்பாளர் அதேபோன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி சீவல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் விசேட அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்
என கிருஷாந்த பத்திராஜ தெரிவித்தார். இதேவேளை, இறக்கப்படும் கள்ளை தனியார் அல்லது பொது இடங்களில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் அந்த இடங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், கள்ளு சேகரிப்பு நிலையங்களில் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.