by Staff Writer 04-04-2020 | 8:38 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை தொடர்ச்சியாக பரிசோதனைக்குட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவினரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுகாதார, வைத்திய பாதுகாப்பு மற்றும் சட்ட விடயதானங்கள் தொடர்பிலான நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய நாட்டில் வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வைரஸ் தொடர்பிலான அவதானத்தை செலுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படவும் ஏதுவாக உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யும் வகையிலான கலந்துரையாடலும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் முதலாவது வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டது முதல் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அபாய நிலை இன்னும் குறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.