உதயங்க வீரதுங்கவிற்கு தனிநபர் பிணை

உதயங்க வீரதுங்கவிற்கு தனிநபர் பிணை

by Staff Writer 03-04-2020 | 4:11 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் செல்வதற்கு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 500 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற எதிர்வரும் 24ஆம் திகதி வரை உதயங்க வீரதுங்கவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனிநபர் பிணையில் இன்று செல்வதற்கு உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உதயங்க வீரதுங்கவிற்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் கடந்த புதன்கிழமை எழுத்துமூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இன்று (03) பிணை வழங்கப்பட்டபோது வீடியோ தொழில்நுட்பத்தினூடாக உதயங்க வீரதுங்கவின் நிலை தொடர்பில் நீதவான் பரிசீலித்துள்ளார். உதயங்க வீரதுங்கவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு 2006 - 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, முறையற்ற விதத்தில் தலையீடு செய்து மோசடியான நிதி திரட்டியமை தொடர்பில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உதயங்க வீரதுங்க இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்று அவரை நாட்டிற்கு அழைத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.