by Staff Writer 02-04-2020 | 6:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை ஏதேனுமொரு பிணை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பாரிய போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்களும் ஏனைய சில சந்தேகநபர்களும் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
எனினும் அவற்றில் 90 வீதமான மனுக்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
121 பிணை மனுக்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராக சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்த ஆட்சேபனையை கவனத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள், ஹெரோயின் கடத்தல்காரர்களின் பிணை கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர்.
இதுவரை சிறைச்சாலைகளில் எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை என இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றை காரணமாக முன்வைத்து போதைப்பொருள் கடத்தல்கார்கள் மற்றும் பாரிய குற்றங்களை இழைத்தோர் விடுதலையை பெறுவதற்கு திட்டமிட்டுள்ள இவ்வாறான சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு சட்ட மா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.