மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு மத்திய வங்கி கோரிக்கை

by Staff Writer 02-04-2020 | 10:27 PM
Colombo (News 1st) தம்மிடமுள்ள சர்வதேச நிதியை நாட்டிற்கு கொண்டுவருமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களிடமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், நாட்டு மக்கள், வௌிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், இலங்கையை நேசிக்கும் வௌிநாட்டவர்கள், வௌிநாட்டு இருப்பு மற்றும் நிதியத்தை, இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவருமாறு மத்திய வங்கியின் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு நிதி நிறுவனங்களுக்கு, அவற்றை முன்னெடுத்துச் செல்ல விசேட நிவாரணங்கள் வழங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் காணப்படும் அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்தவும், எந்த வரியும் வசூலிக்கக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அறிவித்துள்ளார். சர்வதேசத்தில் இருந்து நிதியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு, இன்று (02) முதல் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை முகங்கொடுப்பதற்கு இது பாரிய ஒத்துழைப்பை வழங்கும் என்பது மத்திய வங்கி ஆளுநரின் கருத்தாகும். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த நிதி விதிமுறைகளை தளர்த்துவதற்கு அனுமதி கிடைத்ததாக மத்திய வங்கி ஆளுனரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதியை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.