தனிமைப்படுத்தப்பட்ட 195 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 195 பேர் வீடு திரும்பினர்

by Staff Writer 02-04-2020 | 2:49 PM
Colombo (News 1st) கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் இன்று (02) வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தியத்தலாவை, ரம்பேவ மற்றும் பம்பைமடு கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்பட்டிருந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வௌிநாடுகளிலிருந்து வருகைதந்து வவுனியா - பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட 45 பேரும் இதில் அடங்குகின்றனர். இத்தாலியிருந்து நாட்டிற்கு திரும்பிய குறித்த நபர்கள் 14 நாட்கள் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தனர். 2,314 பேர் இதுவரை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுத்தளபதி குறிப்பிட்டுள்ளார். 1,631 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பிலுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொற்றினால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அடங்கலாக அவருடன் தொடர்புகளை பேணிய 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். அத்துடன், பேருவளை பகுதியில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியிலும் 246 பேர் நேற்று புனானை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, மருதானையில் நேற்று உயிரிழந்த நபர் வசித்த 3 மாடி குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.