ஆறு மாவட்டங்களில் சட்டத்தை மீறிய 288 பேர் கைது

ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 288 பேர் கைது

by Staff Writer 01-04-2020 | 8:23 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ். மாவட்டங்களில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8,739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 2,149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.