by Staff Writer 29-03-2020 | 3:34 PM
Colombo (News 1st) கண்டி - அக்குரணை நகர் மற்றும் களுத்துறை - அட்டுலுகம கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எந்த நபரும் குறித்த பகுதிகளுக்கு பிரவேசிக்கவும் அல்லது அங்கிருந்து வௌியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்டி - அக்குரணை நகரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நடமாடியமையால் புத்தளத்தில் கிராமம் ஒன்றில் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இருந்து இன்று 76 பேர் வௌியேறியுள்ளனர்.
மேலும் 2000 இற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மேலும் சில கண்காணிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.