பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் நிர்வாகி காலமானார்

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி காலமானார்

by Staff Writer 27-03-2020 | 6:58 PM
Colombo (News 1st) பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி தாதி ஜானகி தனது 104 ஆவது வயதில் காலமானார். பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான பாரதத்தின் இராஜஸ்தானிலுள்ள மௌண்ட அபுவில் இன்று அதிகாலை 2 மணி அளவில் இராஜயோகினி தாதி ஜானகி காலமானார். 2007 ஆம் ஆண்டு முதல் பிரம்ம குமாரிகள் இயக்கத்தினை வழிநடத்தி வரும் தாதி ஜானகி, 1970 ஆம் ஆண்டு லண்டனுக்கும் அதன் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று இறைபணியாற்றுதலை அயராது மேற்கொண்டார். தியானத்தின் மூலம் தீயவைகளை நீக்கி அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மிக வழியைப் புகட்டிய இராஜயோகினி தாதி ஜானகியின் இறுதிச்சடங்கு இராஜஸ்தானிலுள்ள பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவும் இராஜயோகினி தாதி ஜானகி நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் மறைவிற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.