ஜனாதிபதியின் செயலுக்கு மன்னிப்பு சபை கண்டனம்

சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு: ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

by Staff Writer 27-03-2020 | 8:25 PM
Colombo (News 1st) முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எடுத்த தீர்மானம், சமூகத்திற்கு கவலையளிக்கும் செய்தி என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகூறல் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் (Biraj Patnaik) தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாரிய குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அதற்கு இணையான குற்றங்களை இழைக்கும் ஒருவர், சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதை பிரதிபலிப்பதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி தெரிவித்தவாறு இத்தகைய தீர்மானங்களை எதிர்காலத்திலும் மேற்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் சூழலை பயன்படுத்தி இத்தகைய குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதை அருவெறுப்புடன் கண்டிப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு 2015 ஆம் ஆண்டு நீதி கிடைத்தாலும், இத்தகைய ஏதேச்சையான முடிவுகள் நீதித் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.